“ஆரம்பிக்கலாமா..” ஐபிஎல் 2023 தொடக்க விழா.. “தல” தோனி இறங்கும் முதல் போட்டி!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

டெல்லி: ஐபிஎல் போட்டிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கிடையே ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சிகளை எப்போது எங்கே பார்க்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.உலகெங்கும் இருக்கும் கிரிகெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் தொடராக ஐபிஎல் இருக்கிறது. 2008இல் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் போது, அது இவ்வளவு பெரியளவில் வெற்றியடையும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.15 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 16ஆவது சீசன் ஐபிஎல் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துவிட்டது.
ஐபிஎல் 16ஆவது சீசனின் முதல் போட்டி வரும் மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. வழக்கம் போல், நடப்பு சாம்பியன் முதல் போட்டியில் இறங்குகிறது.

கடந்த முறை கோப்பை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. மார்ச் 31 வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டி தொடங்கும் முன்பு, கண்கவர் தொடக்க விழா நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.ஐபிஎல் போட்டிக்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே இருக்கிறது. இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் எங்கே நடைபெறுகிறது. தொடக்க நாள் நிகழ்வு எங்கு நடக்கிறது. எப்போது நடக்கிறது. அதை எப்படிப் பார்க்கலாம் என்பது குறித்து விரிவாகக் காணலாம். ஐபிஎல் தொடக்க விழா வரும் மார்ச் 31ஆம் தேதி சீசனின் முதல் போட்டிக்கு முன் குஜராத் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தொடக்க விழாவில் திரைப்பிரபலங்களும் கலந்து கொள்வார்கள். அதன்படி இந்தாண்டு ஐபிஎல் தொடக்க விழாவில் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடனமாட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தவிர கத்ரீனா கைஃப், டைகர் ஷ்ராஃப் மற்றும் அரிஜித் சிங் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் தொடக்க விழாக்களில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஸ்டார் நெட்வொர்க் சேனலிலும், ஜியோ ஓடிடி தளங்களிலும் ஒளிபரப்பாக உள்ளது.சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இரவு 7:30 மணிக்குத் தொடங்குகிறது. குஜராத் மற்றும் சென்னை அணிகள் கடந்த சீசனில் இரண்டு முறை மோதியது. அந்த இரண்டு சீசனிலும் சென்னை அணியே வென்றுள்ளது. முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றிருந்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், சிஎஸ்கே அணிக்கு எம்எஸ் தோனியும் தலைமை தாங்குகிறார்கள். குஜராத் டைட்டன்ஸ் கடந்த சீசனில் தான் முதல் முறையாக களமிறங்கியது. முதல் சீசனிலேயே அவர்கள் பட்டத்தை வென்றனர். ஐபிஎல் வரலாற்றில் எப்போதும் சிறப்பாக விளையாடும் சிஎஸ்கே அணிக்குக் கடந்தாண்டு நல்ல ஒரு ஆண்டாக அமையவில்லை.. சிஎஸ்கே வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்ற நிலையில், ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
ஐபிஎல் போட்டிகளுக்கு மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. முதல் போட்டிக்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து, சென்னை அணி தனது இரண்டாவது போட்டியில் லக்னோ அணியை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை சமீபத்தில் தொடங்கியது. வெறும் அரை மணி நேரத்தில் ஆன்லைன் டிக்கெட் விற்றுத் தீர்ந்த நிலையில், ஸ்டேடியத்தில் வழங்கப்படும் டிக்கெட்களும் ஓரிரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது. இதுவே ஐபிஎல் தொடரை மக்கள் எந்தளவுக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *