ஐதராபாத்தில் சோகம்: கிரிக்கெட் டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!!
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப் போட்டியை காண டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இரு அணிகளுக்கும் முதலாவது டி20 போட்டி 20-ஆம் தேதி மொகாலியில் தொடங்கியது. 2வது போட்டி நாளை நாக்பூரில் நடைபெறுகிறது. இறுதி மற்றும் 3-வது போட்டி வரும் 25 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
இதையடுத்து ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், போட்டியை காண கவுண்டர் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இதனால் டிக்கெட் வாங்க அதிகாலை முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
டிக்கெட் கொடுக்க தொடங்கியதும் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு செய்து நெருக்கி தள்ளி முன்னேறினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டியடித்தனர்.