சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி..!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இருப்பினும், இந்த போட்டியில் அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 5 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விரட்டிய விராட் கோலி இந்த சாதனையை படைத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

உலக அளவில் உள்ள மற்ற வீரர்களுடன் ஒப்பிடுகையில் விராட்கோலி 4-வது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் தவிர, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் அவரவர் சொந்த நாடுகளில் இந்த சாதனையை ஏற்கனவே படைத்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை கடந்த 2007-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் நிகழ்த்தியிருந்தார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இந்திய அணி விளையாடிய 1000 ஆவது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *