பந்து ஸ்விங்கானால் கோலி காலி…நியூசிலாந்து பயிற்சியாளர் பேட்டி!

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாத்தின் சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 தேதி வரை நடக்கிறது. இதற்காக மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர் பயோ பபுள் விதிமுறையின் கீழ் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.விரைவில் இந்திய வீரர்கள் சவுத்தாம்டன் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர்.
இந்நிலையில், சவுத்தாம்படன் மைதானத்தில் பந்து ஸ்விங் ஆனால் கோலி பின்னடைவை சந்திப்பார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் க்ளென் டர்னர் தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராப் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள க்ளென் டர்னர், விராட் கோலி திறமை குறித்து உயர்த்தியோ, தாழ்த்தியோ நான் பேச விரும்பவில்லை. ஒருவேளை சவுத்தாம்டன் மைதானத்தில் பந்துகள் அதிவேகத்தில் ஸ்விங் ஆகும் பட்சத்தில் கோலி பின்னடைவைச் சந்திக்க வாய்ப்புள்ளது. இதனால் இவரை விரைவில் பெவிலியனுக்கு அனுப்ப முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை காலநிலையும் மிகவும் முக்கியம். இங்கிலாந்து காலநிலை நியூசிலாந்தில் இருப்பதைப் போல்தான் இருக்கும். இது எங்களுக்குக் கூடுதல் சாதகம். அதனால் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார் அவர்.