”கொரோனாவால் தான் தோனியின் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோனது” – முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினர் தகவல்

கொரோனா பெருந்தொற்று வராமல் இருந்திருந்தால் தோனி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக நிச்சயம் விளையாடி இருப்பார் என முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினர் சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த 2020 ஆகஸ்ட் 15 அன்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார். தற்போது தோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினரான சரந்தீப் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நிச்சயமாக தோனி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடி இருப்பார். கொரோனா அனைத்தையும் மடைமாற்றி விட்டது. அவர் மிகவும் ஃபிட்டான ஒரு வீரர். ஒரு போதும் பயிற்சிக்கு அவர் முழுக்கு போட்டதில்லை. அனைத்து நாளும் மும்முரமாக பயிற்சி செய்பவர் அவர். காயம் காரணமாக அவர் எந்தவொரு போட்டியிலிருந்தும் விலகியதில்லை என்பதே அதற்கு சான்று.
‘ரொம்ப அதிகமாக யோசிக்க வேண்டாம். சூழ்நிலையை புரிந்து கொண்டாலே அதற்கேற்றபடி முடிவுகளை எடுக்கலாம்’ என்பதுதான் வளர்ந்து வரும் வீரர்களுக்கு தோனி கொடுக்கும் அட்வைஸ். அவர் டி20 உலகக்கோப்பை விளையாடி இருக்க வேண்டும். அது தான் இப்போதுள்ள தேர்வுக் குழு உறுப்பினர்களின் விருப்பமும் கூட” என அவர் தெரிவித்துள்ளார்.