கும்பமேளாவில் கலந்து கொண்டோருக்கு போலியான கொரோனா முடிவுகள்…அதிர்ச்சித் தகவல்!

கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்த இரண்டாவது அலையின் போது ஹரித்துவாரில் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரவியது. இதையடுத்து, திருவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 22 தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததாக, ஒரு லட்சம் போலியான பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஹரித்வார் மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், ஒரே செல்போன் எண்ணைப் பயன்படுத்தி 50-க்கும் மேற்பட்டோருடைய தகவல்கள் பதிவு செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
கும்பமேளா தொடர்பான வழக்கு, உத்தரகாண்ட் நீதிமன்றம் விசாரித்து வந்த போது, தினமும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிட்டிருந்தது. இதனால் அந்த இலக்கை அடைவதற்காக, போலியாக கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.