மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு!

கொரோனா தாக்குதல் அதிகமுள்ள சூழ்நிலையில், நம்மைப் பாதுகாத்துக் கொள்ள கைவசம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான். எனவே, கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் வரிசையில் நின்று தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள கடினமாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இது தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகள் எந்தவித சிரமுமில்லாமல் தடுப்பூசி பெறுவதற்கான பின்வரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள்
முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்.
அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும்.அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுத் தளம் அமைக்கப்பட வேண்டும். தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்பட வேண்டும்” என, தெரிவிக்கப்பட்டுள்ளது.