இனி இவர்களும் முன் களப்பணியாளர்கள் தான்…. அதிரடியாக அறிவித்த குஜராத் அரசு!

நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுக்குள் வைப்பதில் முன்கள பணியாளர்களின் பங்கு இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது.
குஜராத் அரசு இன்று மயானத்தில் பணியாற்றும் ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பது போல, மயானங்களிலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சிதைக்கு தீ மூட்டுவதிலும் வெகுநேரம் காக்க வேண்டியுள்ளது. பல மாநிலங்களில் பிணங்களை எரிக்க முடியாமல் ஊழியர்கள் திணறி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குஜராத் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் நோய் தொற்றால் மயான பணியாளர் உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். கடந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.