ப்ளூ சட்டையின்னாலே கொஞ்சம் பிரச்சனை தான்… நடிகர் பார்த்திபன் நறுக் பேச்சு
பார்த்திபன் கனவு கல்கியின் கனவைவிட நீண்டது – விழுப்புரத்தில் நடிகர் பார்த்திபன் பேச்சு விழுப்புரத்தில் நடைபெற்ற அக்ஷர்தம் சி.பி.எஸ்.சி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
பின்னர் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து, பார்த்திபன் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், நான் திரைப்படத் துறைக்கு வந்து 32 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், எனக்கு இப்போது வயது 30 தான் ஆகிறது என்று தனது வழக்கமான பாணியில் குறும்புத்தனமாக பேசினார்.
தொடர்ந்து, கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய பார்த்திபன், ஒரு டீச்சர் ஒரு சப்ஜெக்ட் எடுப்பாங்க, அல்லது ரெண்டு சப்ஜெக்ட் எடுப்பாங்க. ஆனா ஒரு ஸ்டூடன்ட் எல்லா சப்ஜெக்ட்டுமே படிக்கணும். அப்போ டீச்சரை விட ஸ்டுடென்ட் தான் பெரிய ஆளுங்க என்றார்.
மேலும், அடுத்து என்ன பண்ணப் போறோமோ அதுதான் சாதனை இருக்க முடியும். அந்த வகையில் அடுத்து படம் பண்றதுதான் எனது சாதனை. பள்ளியில் நடைபெறும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைப்பை ஏற்று வருவது மிகப்பெரிய கௌரவம். இதை மேலும் ஒரு தேசிய விருது வாங்கியதாக கருதுகிறேன்.
முதன்முதலில் புதியபாதை படத்திற்கு விருது பெற்றேன். அதைத் தொடர்ந்து, இதுவரை 120 விருதுகள் பெற்று இருக்கிறேன். புதியபாதை பார்ட்-2 படம் எடுக்க முயற்சி செய்து வருகிறேன். ஒரு துறையில் தோல்வி அடைந்தால் வேறு துறையில் நமக்கான வெற்றி காத்திருக்கும். இடைவிடாத முயற்சியும், பயிற்சியும் தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.
பார்த்திபன் கனவு மிகவும் நீண்ட கனவு. முதலில் எனது கனவு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான். அடுத்தக் கனவு திரைப்படத்தை நோக்கி தொடங்கியது. பார்த்திபன் கனவு கல்கியின் கனவை விட நீண்டது. இடைவிடாத முயற்சியும், பயிற்சியும் இருந்ததால் மட்டுமேதான் என்னால் சாதிக்க முடிந்தது. ஒருபக்கம் நடிகராக, மறுபக்கம் இயக்குனராக இரண்டையும் சேர்ந்து பண்ணிக்கிட்டு இருக்கேன்.
சரியான வளர்ச்சி அடைந்தபின்பு வருவதுதான் தன்னடக்கம். அந்த தன்னடக்கத்தை முதலில் நான் ரஜினிசாரிடம் பார்த்திருக்கிறேன். ப்ளூ சட்டை போட்டுக்கிட்டு, எங்கிட்ட ஒருத்தர் கேள்வி கேக்குறார். ப்ளூ சட்டையின்னாலே கொஞ்சம் பிரச்சனை தான். அட்வைஸ் பண்றவங்க யாராக இருந்தாலும் குழந்தைகளுக்கு முதலில் பிடிக்காது. மாணவர்களுக்கு பெற்றோர்கள்தான் ரோல் மாடலாக இருக்க வேண்டும்.
முதலில் என்னுடைய ரோல் மாடல் எனது தந்தைதான். எனது தந்தை மறைவிற்கு பின்பு எனது ரோல் மாடல், நான் முகம் பார்க்கும் கண்ணாடி தான் என்று பார்த்திபன் பேசினார். இந்நிகழ்வில் விழுப்புரம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் ஆர்.லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்