லத்தி பட வருவாயில் ஒரு பகுதியை நலிவடைந்த விவசாயிகளுக்கு வழங்குவேன் பிரமோஷனை தொடங்கிய விஷால்
தன்னுடைய லத்தி திரைப்படத்தை காண வரும் ஒவ்வொருவரின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாயில் டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் எடுத்து விவசாயிகளுக்கு வழங்குவேன் என சேலத்தில் நடந்த லத்தி ப்ரோமோஷன் விழாவில் நடிகர் விஷால் பேசினார். மாணவிகள், ஆசிரியர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து நன்றியோடு செயல்பட வேண்டும் என்றும் பெற்றோர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
லத்தி திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் பங்கேற்று மகளிர் மத்தியில் கலந்துரையாடினார். பின்னர் மகளிர் மத்தியில் நடிகர் விஷால் பேசும் போது,
சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வோடு நான் பெண் குழந்தைகள் சிலரை படிக்க வைத்து வருகிறேன். ஏழைப் பெண்களுக்கு சில கல்லூரிகள் மூலம் படிப்பதற்கு இடம் வாங்கி கொடுத்துள்ளேன். எனக்கு மேடையில் சால்வை , பொக்கே தருவதை தவிர்க்க வேண்டும் என்றும், அந்தப் பணத்தை ஏழை,எளிய பெண் குழந்தைகள் படிக்க வழங்கிடுமாறும் சொல்லி வருகிறேன் என்றார்.
இதனைதொடர்ந்து பேசிய அவர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாணவிகள் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும், இரண்டு பெண் குழந்தைகளை படிக்க வைப்பேன், எனவே படித்து முடித்த பின் தங்களால் சமுதாயத்திற்கு என்ன செய்ய முடியும் என்பதை மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் மாணவர்கள், ஆசிரியர்களை தகவல் மட்டும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து செயல்பட வேண்டும் என்றும் தங்கள் பெற்றோரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
செல்போனில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் சுய பாதுகப்புடன் சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .
ஆண்கள் முன்னேறினால் ஒரு வீடு தான் முன்னேறும், ஆனால் ஒரு பெண் முன்னேறினால் அந்த வீதியே முன்னேறும், எனவே அதனை உணர்ந்து செயல்படுங்கள் என்றும் அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியின் போது மாணவிகள் கரகோஷம் எழுப்பி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.