என் திறமைக்கு இடம் கொடுத்துள்ளீர்கள் – நடிகர் கமல்
கோவை கே.ஜி திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், ரெட் ஜெயின்ட் மூவீஸ் செண்பக மூர்த்தி, திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கு வந்த நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பேசிய கமல் சினிமாவில் சாதித்தது எனக்காக மட்டும் என பெருமை பீத்தி கொள்ள முடியாது, அதற்கு காரணம் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இன்றும் தன்மீது அன்பு மழை பொழிவதாக தெரிவித்தார்.
இது எனக்கானது என நான் நினைத்தால், என்னை விட முட்டாள் வேறு யாரும் கிடையாது. எனது திறமைக்கு கண்டிப்பாக இடம் கொடுத்துள்ளீர்கள் அதற்கு நன்றி எனத் தெரிவித்தார்.
ஓடிடி காலகட்டத்திலும் பழைய திரையரங்குகளை மல்டிப்ளை தியேட்டர்களாக மாற்றி இளைஞர்கள் முன் வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஓடிடி குறித்து முன்கூட்டியே சொல்லியிருந்தேன் இப்போது வந்திருக்கிறது, நான் கூறிய திட்டங்களில் சில செயல்படுத்த முடியாது.
மேலும் சில திட்டங்களை கேட்டாலே பயப்படுகிறார்கள் என தெரிவித்தார். விரைவில் திரையரங்குகளில் உணவகம் வரப்போகிறது, அமெரிக்காவில் அதை செய்து வருகிறார்கள், உணவகமும் தொழில் தான், எந்த நிலையிலும் சினிமாவின் மவுஸ் இன்னும் குறையவில்லை என்றார்.
நல்ல சினிமாக்களை கை விட்டுவிடாதீர்கள் அற்புதமான இயக்குநர்களை கைவிட்டு விடாதீர்கள், நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள், மக்கள் வாழ்த்தினால் எங்கள் வீட்டில் பொன்மழை பொழியும். நல்ல நடிகரை தூக்கிப்பிடித்து நிறுத்துங்கள், எங்கள் சினிமா இன்னும் சிறப்பாக இருக்கும் எனப் பேசினார்.