ஜெய்பீம் பட விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா,இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களுக்கு நடக்கும் அநீதியையும் மையமாக கொண்ட இப்படத்தில் சூர்யா நடித்து அசத்தியிருந்தார்.
இப்படம் வெளிவந்த நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளை கையாண்டது. இந்நிலையில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் மனு அளித்திருந்தார்.
மனுவை விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு பதிவு செய்துள்ளனர். படக்குழுவினர் சார்பில் இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.