விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை..!! சொல்வது என்ன..!
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை அகில இந்திய விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்த தானம் செயலி, அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை செயலி ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தளபதியின் உயிருக்கு உயிரான ரசிகர்கள்.
அப்படிப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்களில் சக்தியை, மக்களுக்கு பயனுள்ள வகையில் வழிநடத்தும் விதமாக மற்றும் ஒரு முயற்சியாக இரத்ததானம் செய்ய தளபதி விஜய் குருதியகம் என்ற செயலியை உருவாக்கி இருக்கிறோம். மேலும் இந்த செயலி, இரத்த தானம் கொடுக்க முன் வருபவர்கள் இணைந்து கொள்ளவும், இரத்தம் தேவைப்படும் பயனாளர்கள் பயன்பெறவும் உறுதுணையாக செயல்படும்.
தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம் விலைமதிப்பற்ற பல உயிர்களை காக்கும் பொறுப்பை தனது ரசிகர்களான தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வழங்கி வழிநடத்த இந்த செயலி துணைநிற்கும் என்பதையும், தளபதியின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.