முதல் படமே இப்படியா?… பிரபல தயாரிப்பாளரை கலங்க வைக்க புதுமுக இயக்குநர்!

தனது தாயாரை மனதில் வைத்துக் கொண்டு அமைத்த திரைக்கதையை கேட்டு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கலக்கிவிட்டதாக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சிகளுக்கு முதல் புகலிடமாகவும், வித்தியாசமான களங்களில் புதுமையான கதைகளை ரசிகர்களுக்கு அளித்து வரும் நிறுவனமாகாவும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் விளங்கி வருகிறது. “அருவி, என் ஜி கே, கைதி” இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படைப்பும் ரசிகர்களிடம் பெரும் பாரட்டுக்களை குவித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக, எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்த் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் இயக்கத்தில் அம்மா பாசத்தை மையமாக வைத்து சயின்ஸ் பிக்சன் படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. முதலில் சிறிய பட்ஜெட் படமாக இருந்த கதை எப்படி பிரம்மாண்டமாக மாறியது என இயக்குநர் கூறியதாவது: “ எனது தாயார் சமீபத்தில் மார்பக புற்றுநோயால் இறந்து விட அவரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. அந்த ‘கணம்’ உருவான கதை தான் இந்த “கணம்”. இந்த திரைக்கதையை தாய் மகன் உறவு, சயின்ஸ் பிக்சன் என பல தளங்களில் பயணிக்கும் வித்தியாசமான படைப்பாக இப்படம் உருவாக்கினேன். இதை ஒரு சிறிய படமாக உருவாக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்து, வித்தியாசமான் கதைகளை தயாரிக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் சொன்னேன். கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் பிரபுசாரை கலங்கடிக்க வைத்து விட்டது…” என்கிறார் இயக்குநர் ஶ்ரீகார்த்திக்.
கதையும் அதன் உணர்வுகள் பயணிக்கும் விதத்தையும் கேட்டு வியந்த தயாரிப்பாளர் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் இதை பெரிய அளவில் உருவாக்குவோம் என்று, படத்தை பிரமாண்டமாகவும் தொடங்கியுள்ளார். இப்படம் மூலம் சர்வானந்த் 10 வருடங்களுக்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். படத்தின் மிக முக்கியமான அம்மா வேடத்தில்,தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத கனவுக்கன்னியாக விளங்கிய அமலாவை நடிக்க வைத்துள்ளது படக்குழு. 25 வருடங்களாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை அமலா இப்படத்தின் திரைக்கதையில் ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அமலா, சர்வானந்த் முதன்மை பாத்திரங்களாக நடிக்கும் இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடித்துள்ளார். சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோருடன் நாசர் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, சுஜித் சாரங்கால் ஒளிப்பதிவு செய்துள்ளார்.