ரசிகர்களை மீண்டும் ஏமாற்றிய ரஜினி

உடல் நிலை பாதிப்பைக் காரணமாகக் கூறி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி அறிவித்திருந்தார். அமெரிக்காவுக்குச் சிகிச்சைக்குச் சென்று திரும்பியுள்ள ரஜினி மீண்டும் தனது அரசியல் நிலை குறித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மாவட்டச் செயலாளர்களை சந்தித்தார். அதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசனை நடத்தப் போவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த ஆலோசனை தற்போது முடிவடைந்துள்ள நிலையில், ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை.
ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை. துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்
’