இவர்களை கௌரவியுங்கள்….முதல்வருக்கு இயக்குநர் சேரன் கோரிக்கை!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு 6 சிறப்பு திட்டங்களை அறிவித்தார்.
அந்த திட்டங்களில் ஒன்றாக தேசியளவில் ஞானபீட,சாகித்ய அகாடமி, மாநில இலக்கிய விருதுகள் என விருது பெரும் தமிழக எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்தப் புதிய திட்டங்களை இயக்குநர் சேரன் வரவேற்றுள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
எழுத்தாளர்களை கெளரவிப்பது பாராட்டுக்குரியது. அதேபோல திரைத்துறையிலும் மக்களுக்கான, சமூகத்திற்கான சீர்திருத்த படங்களை உருவாக்கும் இயக்குனர்கள் திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் கொள்ளுமாறு இந்த பதிவை இடுகிறேன்.
விழிப்புணர்வு மற்றும் வாழ்வியல் சார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர்கள் வியாபாரச்சந்தையிலும் புறந்தள்ளப்படுகிறார்கள். படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. வியாபாரம் சாராததுதான் மக்களுக்கான கலை. அதை கவனத்தில் கொண்டு இதை பாருங்கள். மாநில விருது, தேசிய விருது பெற்ற இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் நிறைய பேர் வாழ்வியல் பிரச்னைகளில் இருக்கிறார்கள். எல்லாத்துறைகளிலும் சிறந்தவர்களை கவனிக்கும் தாங்கள் இத்துறையின் முன்னோடிகளையும் கெளரவிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் என்று குறிப்பிட்டுள்ளார்.