அமைச்சர் கே. என். நேருவின் காரை முற்றுகையிட்டு அராஜகம் செய்த ஆதிமுகவினர்
துறையூரில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேருவின் காரை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அமைச்சர் நேரு. திருச்சி மாவட்டம் துறையூர் வழியாக வந்த அமைச்சர் கே.என். நேருவின் காரை அதிமுகவினர் வழிமறித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிரடியாக அதிமுகவினரின் போராட்டத்திற்கு சில மணித்துளிகளில் தீர்வு கண்டு புறப்பட்ட அமைச்சரின் செயலால் திமுகவினர் ஆச்சரியம் அடைந்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் மற்றும் ஒப்பந்ததாரர் செல்வராஜ் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் பணிகள் செய்துள்ளனர். அதற்கான பட்டியல் தொகை சுமார் ரூபாய் 7 லட்சம் இதுவரை வழங்கவில்லை என கூறபடுகிறது. இத்தொகை குறித்து பலமுறை ஒன்றிய நிர்வாகத்தை அணுகியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையாம்.
இதையடுத்துரமேஷ் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும் ஒன்றிய அலுவலக வளாகத்தில் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் துறையூர் பாலக்கரை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டு வேலைகளை பார்வையிட்டு அங்கிருந்து துறையூர் வழியாக திருச்சி செல்வதற்காக அமைச்சர் கே .என். நேரு வந்தார். துறையூர் பாலக்கரை பகுதியில் மறியலில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர் அமைச்சரின் காரை முற்றுகையிட்டு தங்களது குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
இது பற்றி விசாரித்த அமைச்சர் நாளையே உரிய பட்டியல் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைத்தலை வழங்கினார். இதனால் அதிமுகவினர் அமைச்சரின் வார்த்தையை கேட்டு கலந்து சென்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினரை ஒரு சில நிமிடங்களில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த அமைச்சரின் சாமர்த்தியத்தை கண்டு திமுகவினர் வியந்தனர்.