ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணை நிரம்பியது. உபரிநீர் ஆற்றின் வழியாக வெளியேற்றம். ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஆண்டிபட்டி அருகே 71அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் 5ஆம் தேதியன்று 66 அடியை எட்டியதும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் 7ஆம் தேதியன்று 68.50அடியை எட்டியதும் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், நேற்று 8ஆம் தேதியன்று 69அடியில் இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் இன்று காலையில் இருந்தே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையால் அணையின் நீர்மட்டம் தற்போது 70.50அடியை எட்டியுள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதும் வைகை ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுவதால் தேனி, திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி அணையின் நீர் வரத்தான 4,202 கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 5,960 மில்லியன் கன அடியாக இருக்கிறது.