‘டாஸ்மாக் டார்கெட்’ மது விற்பனையை குறைப்பதுதான்; அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்
மது விற்பனையில் தீபாவளி இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை. விற்பனையை குறைக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு- அமைச்சர் முத்துசாமி.
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக மாணவர் அணி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டி ஈரோட்டில் நடைபெற்றது.. இந்த போட்டிகளை துவக்கி வைத்த தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலையை அகற்றுவதாக அண்ணாமலை கூறிய கருத்து குறித்து பேசிய அமைச்சர், யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை செய்ய முடியாது. இது மிக தவறான கருத்து. பெரியார் மக்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பையும் சமநிலையையும் உருவாக்கிய மிகப்பெரும் தலைவர். அவரின் சிலையை எடுப்போம் என சொல்வது தவறானது் முதலில் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கே வாய்ப்பு இல்லை. அவ்வாறு இருந்தாலும் இது போன்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள முடியாது. நீதிமன்றமும் இதற்கு அனுமதிக்க முடியாது. ஆட்சிக்கு வருவதற்கு அவர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
பெருந்துறை சிப்காட் ஆலை கழிவு பிரச்சனைக்கு படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது விதி மீறிய ஆலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஆலைகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆலைகள் ஒழுங்குபடுத்தப்பட்டால் மட்டுமே மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்பு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து பேசி நிலைமையை எடுத்து கூறி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தண்ணீர் அதிகம் பயன்படுத்தும் 50 நிறுவனங்களில் இருந்து தண்ணீர் அதிகம் வெளிவருகிறது. கடந்த 20 ஆண்டு காலமாக சரியாக கவனிக்காமல் விட்டதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் கவனம் செலுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்் எந்த நிறுவனத்தில் இருந்தும் கழிவுநீர் ஒரு சொட்டு கூட திறந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
கழிவு நீரை சுத்திகரித்து அவர்களே மீண்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாசடைந்த நிலத்தடி நீரை எடுத்து சுத்திகரித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதற்குப் பிறகு குளங்களை சீரமைக்க உள்ளோம் இது தொடர்பாக தொழில் நிறுவனங்கள் அதிகாரிகள் மற்றும் கிராம மக்களை அழைத்து பேசியிருக்கின்றோம் இதற்கான ஒரு நிரந்தர முடிவை எட்ட முடியும்..
மதுபான கடைகளில் அடிப்படை வேலைகள் மேற்கொள்ளப்பட உள்ளது, 500 சதுர அடிக்கு குறைவில்லாமல் இனிவரும் கடைகள் அமைக்கப்படும், அதன் பிறகு ரசீது வழங்கும் நடைமுறை கொண்டுவரப்படும். தீபாவளிக்கு மது விற்பனையில் இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை, மது விற்பனை குறைய வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு என்றார்.