கல்வி கடனை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்வி கடனை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து பொதுநல கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிஜேபி கட்சி தலைமையிலான கூட்டணி கட்சிகளில், தேர்தல் வாக்குறுதியில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு, படித்து பட்டம் பெற்ற மாணவ- மாணவியர், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் மூலம் பெற்ற கடனை செலுத்த முடியாமல் தவிக்கும், மாணவ- மாணவியரின் கடனை, முழுமையாக தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.
இந்த வாக்குறுதி அடிப்படையில் மத்திய அரசு பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும், கல்வி கடன் பெற்று பயின்று, தற்பொழுது வேலை இன்றி தவிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி கடனை தள்ளுபடி செய்யாமல், தனியார் நிறுவன ஊழியர்களை வைத்து, வங்கி கடன் பெற்ற மாணவ- மாணவிகளின் பெற்றோர்களை மிரட்டி வரும், ஒன்றிய அரசினை கண்டித்தும், படித்த இளைஞர்களில், வருடம் தோறும், 2 கோடி நபர்களுக்கு வேலை தருவதாக உறுதி அளித்து,
இதுவரை யாருக்கும் வேலை அளிக்காத ஒன்றிய அரசை கண்டித்தும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் அனைத்து பொதுநலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.