நடக்காத கிராம சபை கூட்டத்தை நடந்ததாக பதிவு செய்த அதிகாரிகள்…!

ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு கிராம மக்கள் இரவில் போராட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சிப்காட் ஆலை கழிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலதொழுவு கிராமத்தில் பொதுமக்களின் புறக்கணிப்பால் கிராம சபை கூட்டம் நடைபெறாத நிலையில், கூட்டம் நடந்ததை போல்  அதிகாரிகள் பதிவு செய்ததாக கூறி இரவிலும் போராட்டம் நடத்திய கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு  பூட்டு போட்டதால் பரபரப்பு நிலவியது.

பெருந்துறை சிப்காட் ஆலை கழிவுகளை தடுக்க கோரி  சுற்று வட்டார கிராம மக்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாலத்தொழுவு ஊராட்சியில் கடந்த முறை நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் ஆலை கழிவுகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இதற்காக தீர்வு காண மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அது போன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்படவில்லை. ஆலை கழிவுகளும் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. 

இந்நிலையில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை பாலத்தொழுவு கிராம மக்கள் புறக்கணித்தனர். ஊராட்சி மன்ற தலைவர், செயலர் மற்றும் பார்வையாளராக வந்த அதிகாரி ஆகியோர் பிற்பகல் 3 மணி வரை காத்திருந்தும் போதிய கோரம் இல்லாததால் கூட்டம் நடைபெறவில்லை. ஊராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 14 பேர் மட்டுமே கூட்டத்திற்கான வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.  கூட்டம் நடக்காததை தீர்மான புத்தகத்தில் பதிவு செய்யுமாறு வலியுறுத்தி கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் அதிகாரிகள் சென்றனர்.

தொடர்ந்து, கூட்டம் நடந்ததை போல் அதிகாரிகள் பதிவேட்டில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கிராம மக்கள் பாலத்தொழுவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் தீர்மான புத்தகத்தை காட்ட மறுத்ததுடன் உரிய பதில் கூறாத நிலையில்,  கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *