திரைப்படம் ஓடாத வேதனையில் தற்கொலை செய்வதாக நடிகரின் வீடியோவால் பரபரப்பு
கிருஷ்ணகிரியை சேர்ந்த திரைப்பட நடிகர், தான் நடித்த படம் ஓடாத வேதனையில் மாயம் – தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ பதிவு செய்து வெளியீடு – தாய் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி போலீஸ் அவரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அடுத்த சென்னசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் L.V.சுரேஷ். இவர் “பூ போன்ற காதல்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதை, திரைக்கதை ஆகியவற்றையும் இவரே எழுதியுள்ளார். இந்த படம் சமீபத்தில் கிருஷ்ணகிரியில் K தியேட்டரில் வெளியானது.
ஆனால் பொதுமக்களின் மத்தியில் வரவேற்பு இல்லை. படம் ஓடாததால் சுரேஷ் மன வேதனையிலிருந்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய சுரேஷ், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. அவரது செல்போன் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவ்வப்போது போனை ஆன் செய்து பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள லாட்ஜில் அவர் தங்கி இருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட லாட்ஜிற்கு நேற்று முன்தினம் சென்று பார்த்தபோது அவர் அந்த லாட்ஜில் இருந்து வேறு இடத்திற்கு சென்று விட்டது தெரியவந்தது. இது பற்றி அவரது தாய் லட்சுமி கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சுரேஷ் வெளியீட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள், இந்த படத்தை முடிக்க சென்சார் சர்டிபிகேட் வாங்க 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். கடன் பிரச்சனை எனக்கு ரொம்ப உள்ளது. இந்த படத்தை நம்பி தான் நான் இருந்தேன், ஆனால் 20 டிக்கெட் கூட வரவில்லை. இப்படியே சென்றால் கண்டிப்பாக என்னால் உயிர் வாழ முடியாது. ஏராளமானோரிடம் கடன் வாங்கி உள்ளேன். ஏராளமானோர் உதவி செய்துள்ளனர்.
அவர்களுக்கு எனது நன்றி. நாளை நான் கண்டிப்பாக உயிரோடு இருக்க மாட்டேன், நான் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் தனியார் டிவி சேனல் எனக்கு உதவி செய்ய வேண்டும். நான் சாவதற்கு முன்பு இந்த செய்தியை போட்டால் இந்த படத்தை பார்க்க எப்படியும் 100 பேர் வருவார்கள், அப்போதுதான் எனது பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக தீரும், அப்படி இல்லை என்றால் நாளை நான் உயிரோடு இருக்க மாட்டேன், நான் இறந்ததற்கு பிறகு போடுங்கள். சாரி., நிறைய பேரை கஷ்டப்படுத்தி விட்டேன். இதுபோன்று யாரும் படம் எடுக்காதீர்கள், நிறைய பணம் இருந்தால் மட்டும் எடுங்கள் எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை அவர் நேற்று முன்தினம், தான் நடத்தி வரும் youtube சேனலில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் இது பற்றி அவர் தாய்க்கு தகவல் தெரிவித்திருப்பதும், பின்னர் தான் போலீசில் அவர்கள் புகார் அளித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.