காவிரியில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு; கன்னட அமைப்பினர் கைது
தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு, தமிழ்நாட்டை நோக்கி முற்றுகையிட முயன்ற கன்னட அமைப்பைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
காவேரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அங்குள்ள கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சாளுவாலி போன்ற அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி இன்று தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் கன்னட சாளுவாலி என்ற அமைப்பின் நிறுவனத் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மாநில எல்லையை தாண்டி தமிழ்நாட்டிற்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை கர்நாடக மாநில போலீசார் தடுத்து நிறுத்தி குண்டு கட்டாக கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.