‘ரூ.1 லட்சம் கொடுத்தால் 2 லட்சம்’ என பல கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றப்பட்ட கிராம மக்கள்.

கடலூர் மாவட்டம் சித்திரைப் பேட்டை கிராமத்தை சேர்ந்த ரெஜினா என்பவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து இரண்டு மடங்காக ஒரே வருடத்தில் கிடைக்கும் என கூறியுள்ளார். இவர் தன்னை அந்த நிறுவனத்தின் ஏஜென்ட் என்று கூறிக்கொண்டு சித்திரைப் பேட்டையை சேர்ந்தவர்களிடம் ரூ.1 லட்சம் போடுபவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் கிடைக்கும் என கூறி பலரிடம் பணம் வசூல் செய்துள்ளார். 

130 பேரிடம் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை வசூல் செய்து நிலையில் தற்போது அந்த ரெஜினா என்பவர் திடீரென மாயமாகிவிட்டார். பணம் போட்டவர்கள் கேட்டபோது அந்த கம்பெனி பணத்தை கொடுக்கவில்லை எனக் கூறியதுடன் தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரெஜினா கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த சித்திரை பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள்  கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து இன்று மனு அளித்தனர். 

130 பேர் கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கும்பகோணம் நிறுவனத்திலும் கேட்டால் அவர்கள் கொலை மிரட்டல் விடுவதாகவும் குடும்பத்தோடு கொன்றுவிடுவோம் என விரட்டுவதாகவும் புகார் மனு அளித்துள்ளனர். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *