என்னடா நடக்குது.! தக்காளி விலை கடும் வீழ்ச்சி ரூ 5க்கு விற்பனை…!
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ 5க்கு விற்பனை விவசாயிகள் வேதனை. தென் தமிழகத்திலேயே மிகப் பெரிய மொத்த காய்கறி சந்தை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வருகிறது.
திண்டுக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு, கரூர் உட்பட பல மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் விளைவிக்கக் கூடிய காய்கறிகளை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு லாரி, சரக்கு வேன், பேருந்து போன்றவற்றில் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து நாள்தோறும் 60% காய்கறிகளை கேரளா வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம். மீதமுள்ள 40% காய்கறிகள் தமிழகத்தில் உள்ள சென்னை, தஞ்சாவூர், திருநெல்வேலி,தேனிமதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளி விளைச்சல் இல்லாத காரணத்தினால் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 200 விற்பனையானது.
இதனையடுத்து விவசாயிகள் அதிக அளவில் தக்காளிகளை பயிர் செய்தனர் இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக 14 கிலோ எடை கொண்ட பெட்டி அதன் தரத்தை பொறுத்து ரூ 70 முதல் 140 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி அதன் தரத்தை பொறுத்து ரூ 5 முதல் 10 வரை விற்பனை செய்யப்படுகிறது இதனால் போதிய விலை கிடைக்காமல் எடுப்புக்கு கூட கட்டுபடியாகாமல் தக்காளி பயிர் செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.