3 பேரை கொன்ற காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை..
3 பேரை கொன்று இருமாநில கிராம மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானையை இரண்டு கும்கி யானைகளின் உதவியோடு மயக்க ஊசி செலுத்தி பிடித்த ஆந்திர மாநில வனத்துறை. திருப்பதி வன உயிரியல் பூங்காவில் விட நடவடிக்கை.
ஆந்திரா மாநிலம் சித்தூர் அடுத்த ராமாபுரம், குடிபால பகுதியில் சுற்றிவந்த ஒற்றை ஆண் காட்டுயானை நேற்று காலை ராமாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த செல்வி- வெங்கடேஷ் தம்பதியினரை மிதித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து யானை ஆந்திர வனத்துறை விரட்டிய நிலையில் அது தமிழக எல்லைக்குள் நுழைந்து காட்பாடி பெரிய போடிநத்தம் பகுதியை சேர்ந்த வசந்தா(55) என்பவரை இன்று அதிகாலை 5 மணியளவில் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் மீண்டும் ஆந்திராவை நோக்கி பயணித்த யானை இன்று காலை முதல் ராமாபுரம் பகுதி விவசாய நிலத்தில் முகாமிட்டிருந்தது. ஒற்றை ஆண் காட்டு யானையை பிடிக்க ஆந்திரா நன்னியாலம் பகுதியில் இருந்து இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து,
மருத்துவ குழுவினரின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி இன்று மாலை பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட யானையானது வேன் மூலம் திருப்பதி வன உயிரியல் பூங்கவுக்கு அழைத்து செல்லப்பட்டது.