ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் வெற்றி செல்லாது; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏவின் வெற்றி செல்லாது என நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தெலங்கானா மாநிலம் கட்வாலா தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணமோகன் ரெட்டியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கட்வாலா எம்எல்ஏவாக டிகே அருணா அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ண மோகன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 2014 தேர்தலுக்கு முன்பு பிஆர்எஸ் கட்சியில் இணைந்தார்.
இதனையடுத்து அவருக்கு தேர்தலில் போட்டியிட அக்கட்சி தலைவர் சந்திரசேகர்ராவ் வாய்ப்பு வழங்கினார். இந்த தேர்தலில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் டி.கே.அருணாவிடம் தேல்வி அடைந்தார். அதன் பின்னர் 2018 தேர்தலில் பிஆர்எஸ் கட்சி வேட்பாளராக கிருஷ்ணமோகன் ரெட்டியும், காங்கிரஸ் வேட்பாளராக டிகே அருணாவும் மீண்டும் போட்டியிட்டனர்.
அந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் டி.கே. அருணாவை எதிர்த்து பண்டா கிருஷ்ண மோகன் ரெட்டி வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தலின் போது சமர்பித்த உறுதிமொழி பிரமாண பத்திரம் ( அபிடவிட் ) போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததற்காக கிருஷ்ணமோகன் ரெட்டிக்கு எதிராக டி.கே. அருணா தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணையை முடிந்த நிலையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. இதில் தேர்தலில் போது போலி ஆவணங்கள் மூலம் உறுதிமொழி பத்திரம் சமர்பித்ததற்காக ₹.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதோடு 2018 தேர்தலின் போது பண்டா கிருஷ்ண மோகன் ரெட்டியின் தேர்தல் வெற்றி செல்லாது என்றும் அவரை எதிர்த்து போட்டியிட்ட டி.கே.அருணாவை கட்வாலா எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டது.
தெலங்கானா மாநிலத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2018 ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்துள்ள நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பண்டா கிருஷ்ண மோகன் ரெட்டி உச்சநீதிமன்றம் செல்வாரா ?என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. டி.கே. அருணா தற்போது பாஜகவில் இணைந்து தேசிய துணை தலைவராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.