‘உனக்கு ஏன் அக்கறை மொமண்ட்’ ஆளுநருக்காக வரிந்து கட்டிய அண்ணாமலை..! 

சம்மந்தம் இல்லாமல் ஆளுநரை திமுகவினர் வம்புக்கு இழுப்பதாக குற்றச்சாட்டு, அதிமுக மாநாடு அந்த கட்சிக்கு முக்கிய மாநாடு, மாநாடு என்றால் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுகுறித்து நாம் கருத்து சொல்ல எதுவும் இல்லை  – பாஜக தலைவர் அண்ணாமலை.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நிலாவிற்கு செல்ல வேண்டுமென்ற பாரதியார் கனவு நேற்று நனவாக்கியுள்ளது. இதுவரை யாரும் செல்லாத தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்துள்ளது. 

இது அனைவருக்கும் கிடைத்த பெருமை. கடந்த காலங்களில் உலக நாடுகள் இந்தியாவை கிண்டல் செய்த நிலை இருந்த நிலையில், தற்போது தனித்துவமான நாடாக இந்தியா உருவாகியுள்ளது. சந்திராயனில் பணியாற்றியவர்கள் மட்டுமல்ல, ஏபிஜெ அப்துல் கலாம் கூட தமிழ் மொழியில் படித்தவர். ஐஎஸ்ஆர்ஒவிற்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய பந்தம் உள்ளது.

நாகப்பட்டினத்திற்கு வர வேண்டிய விண்கல ஏவுதளம், அதுகுறித்த மீட்டிங்கிற்கு 4 மணி நேரம் தாமதமாகவும், தள்ளாடி தள்ளாடி வந்த திமுக அமைச்சரால் ஸ்ரீ ஹரி கோட்டாவிற்கு சென்றது. இரண்டாவது விண்கல ஏவுதளம் குலசேகர பட்டிணத்தில் அமைக்க வேண்டிய கடமை திமுக அரசிற்கு உள்ளது. சந்திராயனில் பணியாற்றிய மூவரும் தேசியத்தை நம்பும் தேசிய தமிழர்கள். பொன்முடி, ஈவிகேஎஸ் இளங்கோவன் நடக்க முடியாமல் ஏசி ரூமில் இருந்து அரசியல் செய்கிறார்கள். 

நாங்கள் 23 நாளில் 128 கி.மீ. நடந்துள்ளோம். இந்த நடைபயணம் முடியும் போது 234 தொகுதிகளிலும் நடந்த முதல் கட்சியாக பாஜக இருக்கும். அரசியல் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.

பாஜக நடைபயணத்தால் அரசியல் புரட்சி நடக்கும். நடைபயணத்தில் பகவத் கீதையை விட பைபிள், குர்ஆன் அதிகமாக வந்துள்ளது. எனது பூஜை அறையில் பைபிள், குர்ஆன் உள்ளது. பாஜகவை இந்துத்துவா கட்சி என எத்தனை நாளுக்கு சொல்ல முடியும்? பாஜக மீதான பிம்பம் உடைத்து அனைவருக்கும் உழைக்கும் கட்சியாக பாஜக உள்ளது. இந்த நடைபயணத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களும் நடந்துள்ளார்கள். 

அரசியல் மாறிவிட்டது. களம் மாறிவிட்டது. நீட் மசோதாவில் ஆளுநருக்கு ரோல் எதுவும் இல்லை. அது குறித்து ஜனாதிபதி முடிவு எடுக்க வேண்டும். ஆளுநரை திமுகவினர் பேசும் முறை சரியல்ல. ஆளுநர் திமுக சவாலை ஏற்று தனது மாநிலமான பீகாருக்கு வந்து திமுகவினரை போட்டியிட சொன்னால் என்ன செய்யலாம்? வாய் உள்ளது என திமுகவினர் பேசக்கூடாது. ஆளுநரை சம்மந்தம் இல்லாமல் வம்பு இழுக்கிறார்கள்.

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான தொடர்பு குறித்து தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும். இதுகுறித்து பதில் சொல்ல திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு என்ன உரிமை உள்ளது? காவிரி பிரச்சினைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் காரணம். 

இதில் இடியாப்ப சிக்கலை உருவாக்கி முதலமைச்சர் ரசிக்கிறார். எல்லா சமுதாயமும் தனித்திறமையால் மேலே வந்து கொண்டுள்ளது. நாடார் சமுதாயத்தில் இந்து, கிறிஸ்துவர்கள் என பிரச்சனை கொண்டு வந்தது கலைஞர் கருணாநிதி. ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவது திமுகவின் முதல் கடமையாக உள்ளது கண்டிக்கத்தக்கது. 

எல்லாருக்கும் சாதி அடையாளம் கொடுப்பது அருவருக்கத்தக்க செயல். ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எதுவும் நடக்காது. காவல்துறைக்கு தான் சிரமம். அதிமுக மாநாடு அந்த கட்சிக்கு முக்கிய மாநாடு. மாநாடு என்றால் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுகுறித்து நாம் கருத்து சொல்ல எதுவும் இல்லை” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *