35 வினாடிகளில் தேங்காயை பல்லால் கடித்து உரித்த வினோத போட்டி…!

சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் நண்பர்கள் நடத்திய பல்லால் கடித்து தேங்காய் உரிக்கும் போட்டியில் 35 வினாடிகளில் தேங்காயைஉரித்து கூலித் தொழிலாளி ரூ.500 பரிசுத்தொகை பெற்றார். இது சமூக வலைதலங்களில் பரவி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே  கோபால்பட்டிவிளக்கு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 46. தேங்காய் மட்டை உரிக்கும் தொழிலாளி. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக அருகிலுள்ள தேங்காய் குடோன்களுக்கு சென்று தேங்காய் உரிக்கும் வேலை செய்து வருகிறார். இதே போல் நேற்று வேம்பார்பட்டியில் உள்ள தனியார் தேங்காய் குடோனில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

அப்போது கம்பியை பயன்படுத்தி வேகமாக தேங்காய் உரிக்கும் அவரைக் கண்ட அவரது நண்பர்கள் கம்பியை பயன்படுத்தி வேகமாக தேங்காய் உரிக்கிறீர்கள் இதேபோல் ஒரு நிமிடத்திற்குள் பல்லால் கடித்தே தேங்காய் உரித்தால் ரூ.500 பரிசு என போட்டி வைத்தனர். 

இதை ஏற்ற ராஜேந்திரன் நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுக்க சொல்லிவிட்டு ஒரு தேங்காயை கையில் எடுத்து பல்லால் கடித்து ஒவ்வொரு பகுதியாக உரித்து எடுத்து 35 வினாடிகளில் ஒரு தேங்காயை உரித்து முடித்தார். போட்டியில் வெற்றி பெற்றதால் அவரது நண்பர்கள் ரூ. 500 பரிசாக வழங்கினர். 

கம்பி உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டே மிகவும் கடினமாக உரிக்க வேண்டிய தேங்காயை வாயில் கடித்து வேகமாக உரித்த ராஜேந்திரனின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *