15 நாட்கள் டிவி பார்க்காமல், கருப்பண்ணசாமிக்கு வினோத விரமிருந்த மக்கள்
வத்தலகுண்டு அருகே கிராம முழுவதும் உள்ள மக்கள் டிவி பார்க்காமல் 15 நாட்கள் விரதம் இருந்த பெண்கள் கலந்து கொள்ளாத கோட்டை கருப்பண்ணசாமி கோவில் திருவிழா.ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா. மூன்று ஆயிரம் ஆடுகளை பலியிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டியில் கோட்டை கருப்பணசாமி கோவிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்று மூன்று ஆயிரம் ஆடுகள் வெட்டி பலியிட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, விராலிப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற கோட்டை கருப்பணசாமி கோவில் ஆடித் திருவிழா, ஒவ்வொரு வருடம் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். தற்போது இந்த வருடம் ஆடி மாதம், ஆடி அமாவாசை முடிந்து அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை ஒரு நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.
குறிப்பாக15 நாட்களுக்கு முன்பு கிராம மக்கள் விரதத்தை தொடங்குவார்கள். விரதம் இருக்கும் போது கிராமம் முழுவதும் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிவி பார்க்காமல் கடுமையான விரதம் இருந்து இந்த திருவிழாவை கொண்டாடுவார்கள்.இன்று காலை முதல் மாலை வரை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கோட்டை கருப்பணசாமி கோவிலில் குடும்பத்துடன் அருள் பெற்று சென்றனர்.
அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் விடிய விடிய ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இக்கோவிலுக்கு பக்தர்கள் ஆட்டுக்குட்டிகள் கெடாக்கள் மற்றும் சேவல்களை நேர்த்திக்கடனாக செலுத்தி இருந்தனர். ஆண்டு முழுவதும் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் ஆடுகள் கோயில் நிர்வாகத்தால், பராமரிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு கோட்டை கருப்பணசாமிக்கு பலியிடப்பட்டது.
இந்த திருவிழாவில், விராலிப்பட்டி, வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, தேவதானப்பட்டி, பெரியகுளம், திண்டுக்கல், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் கலந்துகொண்டு நள்ளிரவில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய, ஆடு மூன்று ஆயிரத்துக்கும் மேலான ஆடுகள் மற்றும் நூற்றுக்கணக்கான சேவல்களை ஒரே நேரத்தில் பலியிட்டப்பட்டது.
பலியிடப்பட்ட ஆடு, சேவல்கள் அனைத்தும் மொத்தமாக சமைக்கப்பட்டு, ஆண் பக்தர்களுக்கு கறி மட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டது. திருவிழாவிற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முருகன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டியிருந்தனர்.