‘பிரபலமான ரவுடியாக’ அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கைது…!
கோவையில் பொது இடத்தில் வைத்து கொலை செய்து, பிரபலமாக அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ரத்தினபுரி நால்வர் லே அவுட் ஒரு பகுதியை சேர்ந்தவர் மணிவாசகம் என்பவரின் மகன் சேகர் (54). கடந்த 35 வருடங்களாக சொந்தமாக இன்டீரியர் வேலை செய்து வருகிறார். இவர் தில்லைநகர் ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ரயில்வே கேட் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கையில் பெரிய அரிவாளுடன் அமர்ந்திருந்தனர்.
அப்போது அந்த இளைஞர்கள் நீதிமன்ற நுழைவு வாயில் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்தது போல, ஒரு கொலை சம்பவத்தை அரங்கேற்றினால் கோவை நகரில் நாமும் பெரிய ரவுடி ஆகி விடுவோம் என்று பேசியுள்ளனர். மேலும் அஸ்வின் குரூப்பில் இருக்கும் ஷெரீப் கண்ணப்பநகர் டாஸ்மாக் கடைக்கு வருவான். அங்க வச்சு அவன் கழுத்த இரண்டா அறுத்து கொலை பண்ணணும். கண்ணப்ப நகர் ஏரியாவையே சிதற விடணும் என்று பேசி உள்ளனர்.
அந்த இளைஞர்கள் பேசியதை சேகர் கவனித்துவிட்டதை அவர்கள் பார்த்து விட்டனர் .உடனே அந்த இளைஞர்கள் சேகரிடம் வந்து அரிவாளை காட்டி மிரட்டி இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து சேகரின் கழுத்தில் வைத்து மிரட்டி உள்ளனர்.
இதை பார்த்து அங்கிருந்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் சேகர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 500 ரூபாய் பணத்தை மிரட்டி எடுத்துக்கொண்டு அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து சேகர் ரத்தினபுரி போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து ரத்தினபுரி சம்பத் வீதி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் சூர்யா (25) , நாகேந்திரன் என்பவரின் மகன் தீபக் என்கிற தீபக் தமிழா(20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.