கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பேராசிரியரை தேடும் மகளிர் போலீசார்…!
பல்லடத்தில் அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.3 தனிப்படை அமைத்து தலைமறைவான பேராசிரியரை தேடும் மகளிர் போலீசார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மங்கலம் சாலையில் உள்ளது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே கல்லூரியில் தமிழ் துறை தலைவரான பாலமுருகன் மீது கவல்துறையினர் போக்ஸ்சோ வழக்கு பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் பாலமுருகன். நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி பல்லடம் அரசு கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாணவி ஒருவருக்கு கல்லூரி வளாகத்திலேயே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி ஆன்லைன் மூலமாக புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நன்னடத்தை அலுவலர் மாணவியிடம் நடத்திய விசாரணையில் பேராசிரியர் பாலமுருகன் கல்லூரியிலேயே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது.
இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நன்னடத்தை அலுவலர் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட தமிழ் துறை தலைவர் பாலமுருகன் தலைமறைவானதும் தெரிய வந்துள்ளது.
கல்லூரியில் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பல்லடத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கல்லூரி சார்பில் துறை ரீதியான விசாரணைக்கும் வராமல் அவர் தலைமறைவாக உள்ளார். தலைமறைவான பாலமுருகனை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.