276 அடி நீளமுள்ள பிரம்மாண்ட தேசிய கொடி ஊர்வலம்…!
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளி சார்பில் 276 அடி நீளமுள்ள பிரம்மாண்ட தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சியில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளி சார்பில் நேற்று 276 அடி நீளமுள்ள தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதனை வேப்பங்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலமானது வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் இருந்து தொடங்கி வேப்பங்குப்பம், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாக ஒடுகத்தூர் பேருந்து நிலையத்தில் முடிந்தது.
இதில், தனியார் பள்ளி மாணவர்கள் தங்கள் கைகளில் தேசிய கொடியை ஏந்தியபடி சென்றனர். அப்போது, வழிநெடுகிலும் நின்றிருந்த பொதுமக்களுக்கு 1000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும், இதில் சிறுவர்கள் 50க்கும் மேற்பட்டோர் காந்தி வேடமிட்டபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர், பேருந்து நிலையத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.