இந்தியாவிலேயே முதல் முறையாக புழல் சிறை பெண் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை…!

இந்தியாவிலேயே முதல் முறையாக புழல் மத்திய சிறை அருகே பெண் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு. சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிறைவாசிகள் விடுதலையாகும் போது சுயமாக தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்படுத்தும் தமிழ்நாடு சிறைச்சாலை. அமைச்சர் ரகுபதி.

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து ஏற்கனவே தமிழ்நாட்டில் 5இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் நிறுவப்பட்டு சிறைவாசிகளை கொண்டு இயங்கி வருகின்றன. 

சென்னை புழல் பெண்கள் மத்திய சிறையின் அருகே பெண் கைதிகள் பணியாற்றுவதற்காக புழல் – அம்பத்தூர் சாலையில் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் அமைக்கப்பட்டது. நன்னடத்தை அடிப்படையிலான சிறைவாசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் இந்த சிறை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பணியாற்றிட வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

பகல் நேரத்தில் இரண்டு ஷிப்டுகளில் 30பெண் சிறைவாசிகளும், இரவுப்பணியில் 17ஆண் சிறைவாசிகளும் பணியாற்றிடும் வகையில் இந்த பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் முதல் விற்பனையையும் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் சிறைவாசிகளால் நடத்தப்படும் முதல் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது என பெருமிதம் தெரிவித்தார். தெலுங்கானாவில் விடுதலையான பெண் சிறைவாசிகளுக்காக பெட்ரோல் பங்க் நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் பெண் சிறைவாசிகளாலே நடத்தப்படும் முதல் பெட்ரோல் பங்க் என்ற பெருமையை கொண்டது என்றார். 

மகளிர் முன்னேற்றத்திற்கும், ஆணுக்கு பெண் சமம் என்ற திராவிட மாடல் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு என்றார். பெண் சிறைவாசிகள் மாதந்தோறும் சுமார் 6000ரூபாய் தங்களுடைய குடும்பத்திற்கு அனுப்பும் வகையில் தற்போது பணி வழங்கப்பட்டுள்ளது எனவும், விரைவில் மாதந்தோறும் 10000ரூபாய் அனுப்பும் நிலை உருவாக்கி தரப்பட உள்ளது என்றார். 

சிறையில் இருந்தாலும் தங்களை உணர்ந்து, திருந்தி வாழும் வாய்ப்பை பெற்று தங்களது குடும்பத்திற்கு ஆகும் செலவினை சிறையில் இருந்து அனுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளில் உள்ள ஆண், பெண் சிறைவாசிகள் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபடுத்தி மாதந்தோறும் தங்களது குடும்பத்திற்கு பணம் அனுப்பும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 

சிறையில் இருந்தாலும், குடும்பத்தினருடன் தொடர்பில் வைத்து கொண்டு குடும்ப உணர்வு, குடும்ப பாசத்துடன் இருப்பதற்கான முயற்ச்சி எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரகுபதி. சிறையில் இருந்து விடுதலையாகி செல்லும் போது சுயமாக தொழில் செய்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற முடியும் என சிறைவாசிகளுக்கு தமிழ்நாடு சிறைச்சாலை தன்னம்பிக்கை அளித்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *