அடித்தால் திருப்பி அடிப்போம், உடைப்போம்… ஆடியோ வெளியீட்ட பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி கைது…!

கேரளாவில் தமிழக ஜீப் ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் – தேனி மாவட்டத்திற்குள் வரும் கேரள வாகனங்களை தடுத்து உடைப்போம் என சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியீட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி கைது. சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி.எச்சரிக்கை.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தோட்டங்களுக்கு பெண் தொழிலாளர்களை  அழைத்துச் சென்ற தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த ஜீப் ஓட்டுநர் சதீஷ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவைச் சேர்ந்த சில நபர்களால் தாக்கப்பட்டார். கம்பம் மெட்டு சாலையில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சதீஷ்குமார் புகாரில், வழக்குப் பதிவு செய்த கேரள போலீசார் தாக்குதல் நடத்திய மூவரை கைது செய்தனர்.

இதனிடையே தமிழக ஜீப் ஓட்டுநர் மீது கேரள மாநிலத்தவர் தாக்குதல் நடத்தியதை கண்டிக்கும் விதமாக தேனி மாவட்டம் கம்பம் நகர அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி செயலாளர் அறிவழகன்(42) சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குமுளி, கம்பம் மெட்டு மற்றும் போடி மெட்டு ஆகிய 3மலைச்சாலைகள் வழியாக தேனி மாவட்டத்திற்குள் வரும் கேரள வாகனங்களை தடுத்து உடைப்போம் என குரல் பதிவிட்டுள்ளார்.

இதனால் தமிழகம் – கேரள மாநிலங்களுக்கு இடையே அசாதாரண சூழல் நிலவுவதாகவும், சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இது போன்ற கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதால் அறிவழகன் மீது கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து இன்று கைது செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இரு மாநிலங்களுக்கு இடையே இது போன்று அசம்பாவிதம் ஏற்படும் வகையில் கருத்துக்கள் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்ரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *