ஆருத்ராவை அடுத்து மிகப்பெரிய மோசடி… 6 ஆயிரம் கோடிக்கு மேல் ஆட்டயப்போட்ட நிதி நிறுவனம்…!
IFS நிதி நிறுவனத்தில் 150 கோடி வரை முதலீடு பெற்ற முகவர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள் கடன் வாங்கி முதலீடு செய்தோம் என கிராம மக்கள் வேதனை. வேலூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐஎப்எஸ் நிதி நிறுவனமானது வாடிக்கையாளர்களிம் 7% முதல் 25% வரையில் அதிக வட்டி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டனர்.
இந்த நிறுவனம் சுமார் 84 ஆயிரம் பேரிடம் இருந்து சுமார் 5 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை பெற்று ஏமாற்றியதாக தற்பொழுது வரை புகார் வந்துள்ளது. நிதி நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் இந்த நிதி நிறுவனம் சுமார் 15,000 கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களிடம் முதலீடுகளை பெற்றது என தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
நிதி நிறுவனத்தின் 4 முக்கிய இயக்குநர்கள் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாகவும், அவர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் தொடர்புடைய நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் கிராமத்தில் வசித்து வரும் ஆனந்த் செல்வராஜ் , ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தில் முக்கிய முகவராக காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்தார். இவர் காஞ்சிபுரம் பகுதியில் சுமார் 150 கோடி ரூபாய் வரை முதலீடுகளை பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக வளத்தோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியில் 10 கோடி ரூபாய் வரை முதலீடுகளை பெற்றுள்ளார். அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியதை, நம்பிய கிராம மக்கள் நகை மற்றும் லோன் பெற்று ஆனந்த் செல்வராஜ்ய நம்பி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பி தராமல் தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் ஆனந்த் செல்வராஜ், வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து பொதுமக்களை கலைந்து சென்றனர்.