செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் மீண்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
கரூரில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் 3வது முறையாக வருமானவரித்துறை அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் கடந்த மேமாதம் 26- தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு அலுவலகங்களில் தொடர்ந்து 8 நாட்கள் சுமார் 25-க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர். மேலும் சோதனையின் போது வருமானவரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், தலைமறைவாக இருந்த சில இடங்களில் அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் கடந்த மாதம் இரண்டாவது முறையாக வருமானவரித்துறை அதிகாரிகள் 10 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது முறையாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் குறிவைத்து சோதனை தொடங்கியுள்ளார்.
இன்று நடைபெறும் சோதனையில், ராயனூர் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் கொங்கு மணி என்கிற சுப்பிரமணி வீடு, 300 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருவதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய வீட்டின் இடத்தில் முன்னாள் உரிமையாளர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீ ராம விலாஸ் பேக்டரி உரிமையாளர் ரமேஷ் பாபு அலுவலகம், கரூர்-கோவை சாலையில் உள்ள கார்த்திக் என்பவரின் சக்தி மெஸ் உனவகம், கோவை சாலையில் உள்ள அதிபர் பைனான்ஸ் ரமேஷ் அலுவலகம், குறிஞ்சி பைனான்ஸ் என 5- இடங்களில் தற்போது வருமானவரித்து அதிகாரிகள் போதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து கடந்த முறை நடைபெற்ற சோதனையின் போது கரூரில் சீல் வைத்து சென்ற இடங்கள் மற்றும் ஒரு சில இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.