நீட் எழுதினாலும் விடுவோமா? அடுத்து ‘நெக்ஸ்ட்’ தேர்வு.. டாக்டர்கள் சங்கப் பொதுச்செயலர் எச்சரிக்கை
மாணவர்களை பாதிக்கக்கூடிய, சமூக நீதிக்கு, மாநில உரிமைகளுக்கு எதிரான “நெக்ஸ்ட் தேர்வை” ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்.. தமிழ்நாடு அரசுடன் இணைந்து போராடுவோம். சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கப் பொதுச்செயலர் ஜி.ஆர். ரவீந்திரநாத் தஞ்சையில் செய்தியாளர்கள் சந்திப்ப
தஞ்சாவூரில் நெக்ஸ்ட் தேர்வை கைவிட கோரி இன்று நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்ற சமூக சமத்துவத்திற்க்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர்.இரவீந்திரநாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். ஒன்றிய அரசு நெக்ஸ்ட் என்கிற தகுதித் தேர்வை மருத்துவப் படிப்பில் திணிக்கிறது. இத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் பிரதமருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதை மனதார வரவேற்கிறோம். நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்கு தமிழ்நாடு அரசு அடுத்த கட்டமாக எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கமும், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கமும் உறுதுணையாக இருக்கும். நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வு மிகப்பெரிய பாதிப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்தும். போட்டித் தேர்வையும், தகுதித் தேர்வையும் ஒன்றாக இணைப்பது சரியல்ல. வேறு எந்த நாட்டிலும் இப்படியொரு முறை இல்லை.
எம்.பி.பி.எஸ். இறுதியாண்டில் தகுதி பெறுவதற்கான தேர்வை நடத்துவது மாநில அரசின் மருத்துவப் பல்கலைக்கழகம்தான் நடத்தும். இந்நிலையில், எம்.பி.பி.எஸ். இறுதியாண்டில் தேர்ச்சி பெறுவதற்கும், முதுநிலைப் பட்டப்படிப்பில் சேருவதற்கும், வெளிநாட்டிலிருந்து படித்து வருபவர்களுக்கும் ஒரே தேர்வு என எல்லாவற்றையும் ஒன்றாக இணைப்பது என்பது மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும்.
எம்.பி.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெறுவது என்பது வேறு. போட்டித் தேர்வு என்பது இடங்கள் குறைவாக இருக்கும்போது கடுமையான போட்டி இருக்கும். அதற்கு கடும் பயிற்சி அவசியம். அப்போது, அதையும், இதையும் இணைக்கும்போது ஏராளமான பிரச்னைகளையும், சிக்கல்களையும் உருவாக்கும். இதில், ஏராளமானோர் தோல்வி யடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
இதனால், சாதாரண ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிப்பதற்கு வரமாட்டார்கள். எனவே, இரண்டையும் இணைப்பது என்பது சரியல்ல. இதன் காரணமாக இந்த நெக்ஸ்ட் தேர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றார்
ஒரே நாடு, ஒரே மருத்துவம் என்று வகையில் நவீன மருத்துவத்தை நீர்த்து போக செய்து சித்தாந்த ரீதியில் ஒன்றிய அரசு முடிவு செய்வதாகவும் குற்றம் சாட்டினார். பேட்டியின் போது சங்கச் செயலாளர் ஏ.ஆர். சாந்தி, மருத்துவ மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்..