‘என் தொகுதியின் தேர்தல் பதட்டத்தை நினைவு படுத்துகிறது மாமன்னன்’… திருமா நெகிழ்ச்சி

மாரி செல்வராஜ் துணிச்சலாக இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தை தயாரித்து, நடித்து வெளியிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டுகிறேன். சாதனத்தின் அடிப்படை கூறாக இருக்கிற பாகுபாட்டினை படத்தின் கருப்பொருளாக எடுத்துள்ளார். சாதி வெறிக்கும் சமூக நீதிக்குமான போரில் சமூக நீதி வெற்றி பெறும் என்பதை உணர்த்தியுள்ளார். சமூக நீதிப்போராட்டம் எவ்வளவு குருதி சிந்தும் போராட்டமாக இருக்கிறது என்பதை மிக தத்துரூபமாக எடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 

வடிவேலு நடிப்பு மிகவும் அபாரமாக உள்ளது. திரைப்படம் காலத்திற்கு பொருத்தமான ஒன்று. அரசியலில் எந்த அளவுக்கு சாதியும் தலைவிரித்து ஆடுகிறது, சமூகத்தில் நீண்ட நெடுங்காலமாக இறுகி கிடக்கிற சாதியப்போக்குகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை அவர் தன்னுடைய படத்தில் மிக முக்கியமான காட்சியாக வைத்திருக்கிறார்.

சாதி இந்துக்கள் என்கிற வளையத்துக்குள் எல்லோரும் சிக்கிக் கொள்ளக் கூடாது, ஜனநாயக சக்திகளாக எழுச்சி பெற வேண்டும், சாதி சமூக அடையாளங்களை உதறிவிட்டு மாமன்னனுக்கு வரவேற்பு கொடுக்கக்கூடிய வகையிலே சாதி இந்து சமூகத்திலிருந்து இளைஞர்கள் வெளியே வருகிற காட்சி படத்தில் மிக முக்கியமான ஒரு புள்ளி.

இந்தப் படத்தில் பல்வேறு காட்சிகள் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்தவற்றின் தொகுப்பாக உள்ளது.

கிணற்றிலே சிறுவர்கள் குளிக்கிற காட்சி அரியலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம். அப்போது மின்சாரத்தை பாய்ச்சி 4 சிறுவர்களை படுகொலை செய்தார்கள். இந்த படத்தில் கல்லால் அடித்து கொலை செய்கிறார்கள்.

காசிபுரம் என்பது ராசிபுரத்தை நினைவூட்டக்கூடியதாக இருப்பதால், மாமன்னன் சபாநாயகராக சபாநாயகர் நியமிக்கப்படுவதனால், அது முன்னாள் சபாநாயகர் தனபாலை நினைவூட்ட கூடிய காட்சிகளாக இருக்கின்றன. நட்சத்திர சின்னம், தேர்தல் பின்னடைவு, எல்லோரும் வென்றார்கள் என்ற அறிவிப்புக்கு பிறகு மாமன்னன் வெற்றி அறிவிப்பு என்பது 2019 சிதம்பரத்தில் என்னுடைய தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்பட்ட பதற்றத்தை நினைவுபடுத்துகிறது.

நட்சத்திர சின்னம் 2009ல் நான் போட்டியிட்டு வெற்றி பெற்ற சின்னம். ஒட்டுமொத்தத்தில் யார் நிற்பது யார் அமர்ந்திருப்பது என்கிற அடிப்படையில் நீண்ட காலமாக இந்த சமூகத்தின் நிலவுகிற மிக மோசமான சாதியை இறுக்கத்தை தளர்வு செய்கிற ஒரு உரையாடல் இந்த படத்தில் நிகழ்ந்திருக்கிறது.

இமானுவேல் சேகரன் கூட அமர்ந்திருந்ததால் தான் கொல்லப்பட்டார். இங்கே அமர்வதும் நிற்பதும் சாதியின் அடையாளங்களாக இருக்கின்றன. இந்தப்படம் வெற்றிகரமாக எல்லோராலும் ஏற்கப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் மட்டுமே வரவேற்கவில்லை. ஜனநாயக சக்திகளாக இருக்கிற மக்கள் இதை வரவேற்று வெற்றி பெற வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமூகநீதி வெல்லும் என்பதை இந்தப்படம் உறுதிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *