ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை… 8 பேர் கும்பல் வெறிச்செயல்..!

ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை, சொகுசு காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை சொகுசு காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் ராமதாஸ் என்பவரின் மகன் கேசவன் (45). ரியல் எஸ்டேட் தொழில், பைனான்ஸ் தொழில் செய்து வந்ததுடன், செங்கல் சூளையும் வைத்திருந்தார். 

இன்று மாலை தளி அருகே உள்ள என்.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் பணம் வாங்குவதற்காக கேசவன் தனது மோட்டார் சைக்கிளில் கே.மல்லசந்திரம் கிராமத்தின் அருகில் வந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த கார் ஒன்று திடீரென்று இவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. 

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கேசவனை காரில் இருந்து இறங்கிய 8 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாளுடன் விரட்டிய நிலையில், அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாளால் கேசவனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் கேசவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் காரில் தப்பி சென்றது.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தளி போலீசார் இறந்த கேசவனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருவதுடன் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தளி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *