பிரமாண்டமாக 165 ஏக்கரில் கட்டப்பட்ட ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்! -ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 165 ஏக்கரில் பிரமாண்டமாக விரிவாக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைக்கிறார்.நாடு முழுவதும் சுமார் 25 உயர்நீதிமன்றங்கள் இருக்கின்றன. இந்நிலையில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியின் துர்வாவில் உள்ள உயர்நீதிமன்ற சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இது நாட்டின் மிகவும் பெரிய உயர்நீதிமன்றம் என்கிற அந்தஸ்தை பெற்றிருக்கிறது. அதாவது சுமார் 165 ஏக்கர் பரப்பளவில் இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை புதுப்பிக்கும் பணி கடந்த 2015ம் ஆண்டே தொடங்கப்பட்டது.இப்பணிகள் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அனால் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட நான்கரை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இந்த நீதிமன்றத்தை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார். பரப்பளவில் இது உச்சநீதிமன்றத்தை விட 22 ஏக்கர் அளவில் பெரியதாகும். ரூ.550 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் 500 சிசிடிவி கேமராக்கள், 1,200 வழக்கறிஞர்கள் அமரும் வகையில் இரண்டு அரங்குகள், 540 அறைகள் கொண்ட சேம்பர் போன்ற பல வசதிகள் உள்ளன.இது தவிர 30,000 சதுர அடியில் கட்டப்பட்ட நூலகம், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், 2,000 வாகனங்களுக்கான பார்க்கிங் செய்யும் வசதி, வழக்குகளை விசாரிக்க 25 பிரமாண்ட குளிரூட்டப்பட்ட நீதிமன்ற அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உயர்நீதிமன்ற கட்டிடத்தில் சுமார் 68 ஏக்கரில் மூன்று தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற பகுதி இரண்டு தளங்களைக் கொண்டது. இதில், தலைமை நீதிபதி நீதிமன்றம் உட்பட மொத்தம் 13 நீதிமன்றங்கள் முதல் தளத்திலும், மேலும் 12 நீதிமன்றங்கள் இரண்டாவது தளத்திலும் கட்டப்பட்டுள்ளன.

தட்டச்சர்களுக்கு தனி அறை, 70 போலீசார் தங்கும் அறைகள், தனியாக அட்வகேட் ஜெனரல் அலுவலகம், நான்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் மற்றும் 95 அரசு வழக்கறிஞர்களுக்கான அறையும் புதிய உயர் நீதிமன்றத்தில் இருக்கும். இதுதவிர, 30 பேர் அமரும் வகையில் கூட்ட அரங்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய உயர் நீதிமன்றக் கட்டிடத்தின் மொத்தக் கட்டுமானப் பரப்பு சுமார் 68 ஏக்கர்.இந்த நீதிமன்ற வளாகத்தை பசுமையாக வைத்திருக்க மொத்தம் 4,436 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் ஒரு தபால் நிலையம், மருந்தகம், ரயில்வே முன்பதிவு கவுன்டர் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. வளாகத்தில் சூரிய சக்தி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முழு வளாகமும் சுமார் 60 சதவீத அளவுக்கு சூரிய சக்தியில் இயங்கும். இதற்காக பார்க்கிங் ஏரியாவில் 2,000 KVA திறன் கொண்ட சோலார் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, 2,000 KV ஜெனரேட்டர்களும் நிறுவப்பட்டுள்ளன, இதில் 1,500 KV ஒரு மற்றும் 500-500 KV திறன் கொண்ட இரண்டு ஜெனரேட்டர்கள் உள்ளன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த உயர்நீதிமன்றத்தை குடியரசுத் தலைவர் இன்று திறந்து வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *