அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்…!
சென்னையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு – கோவையில் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலைந்து சென்றனர்.
காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், கோடை விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர், இன்று காலை இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் குறித்து சென்னையில் ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் கீதா ஜீவன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.
முன்னதாக கோவை எம்.பி. PR. நடராஜன் தொடர்ந்து போராடிய தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதையடுத்து அங்கன்வாடி ஊழியர்கள் பேச்சு வார்த்தியில் உடன்பாடு ஏற்பட்டதை கைத்தட்டி வழவேற்று, கோசங்களை எழுப்பினர்.