“மோடி வரும் போதெல்லாம் ஆளுநர் ரவி இப்படி பேசுகிறார்”-கடுமையாக தாக்கிய முதல்வர்
ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி
பிரதமர் தமிழ்நாடு வரும் போதோ அல்லது பிரதமரை சந்திக்க நான் டெல்லி செல்லும் போதோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபையில் குறிப்பிட்டு உள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சட்டசபையில் இன்று காலை தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்புடையதாக இல்லை, என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.
சட்டசபை மாண்புகளை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் . சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. முக்கியமாக ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று தனி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதுதமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்த பின் பேசிய அவர், ஆளுநர் என்பதை மறந்துவிட்டு அரசியல்வாதியாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி. விதண்டவாதமாக பேசி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாட்டு மக்களின் நண்பராக செயல்பட மறுக்கிறார் ஆளுநர் ரவி. ஆளுநர் பொதுவெளியில் அரசு நடவடிக்கைகளை விமர்சிக்கிறார். பிரதமரிடம் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ரவி. ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல.
தமிழ்நாடு சட்டசபையை அவமதித்து வருகிறார் ஆளுநர் ரவி. ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றிக் கொண்டு வருகிறார் ஆளுநர் ரவி. ஆளுநரின் செயல்பாடுகளை கை கட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ஆளுநர். பிரதமர் தமிழ்நாடு வரும் போதோ அல்லது பிரதமரை சந்திக்க நான் டெல்லி செல்லும் போதோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை, அவரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம். சட்டமன்றத்திற்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால் அதனை கை கட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். அரசியல் சட்டம் ஆளுநருக்கு தெரியவில்லை என்று கூறமாட்டேன். ஆனால் அவருக்கு இருக்க வேண்டிய “அரசியல் சட்ட விசுவாசத்தை”, “அரசியல் விசுவாசம்” அப்படியே விழுங்கி விட்டது என்றே அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருப்பதற்கு தயாராக இல்லை என்று, பதவியேற்ற நாளில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யும் செயல்கள் வெளிப்படுத்தி வருகிறது. அரசியல் சட்டத்தின் தந்தை அம்பேத்கர், ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாதவராக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.