சென்னை | கடையின் ஷட்டரை திறந்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
-ஊடகவியலாளர் இராகவேந்திரன்
சென்னையில் கடையின் ஷட்டரை திறந்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.
சென்னை புளியந்தோப்பு வஉசி நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் கோபி(29). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் மளிகை கடை ஷட்டரை திறக்கும் போது கோபி திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கோபியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கோபியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கோபி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து புளியந்தோப்பு போலீஸார் கோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் கோபி வீட்டு அருகே உள்ள மின்சார பெட்டியில் சிலர் அத்துமீறி மின் இணைப்பை எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
பாதுகாப்பற்ற முறையில் மின்சார வயரை கோபியின் கடை வழியாக சிலர் எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் மின்கசிவு ஏற்பட்டு கடையின் இரும்பு ஷட்டர் வழியே மின்சாரம் பாய்ந்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.