#BIG BREAKING: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை!
“எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான குடும்ப பெயராக உள்ளது” என பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக கர்நாடகாவின் கோலாரில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி “எனக்கு ஒரு கேள்வி உள்ளது. நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடியாக இருந்தாலும், எல்லா திருடர்களின் பெயரிலும் மோடி என ஏன் இருக்கிறது? இன்னும் எத்தனை மோடிகள் வெளிவருவார்கள் என்பது எங்களுக்குத் தெரிவில்லை” என பேசினார்.
ராகுல் காந்தி தனது கருத்து மூலமாக ஒட்டுமொத்த மோடி சமூகத்தையே அவமதித்து விட்டதாகவும், பிரதமர் மீது அவதூறு பரப்புவதாகவும் பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ., பூர்ணேஷ் மோடி என்பவர் அதே ஆண்டு அளித்த புகாரின் கீழ், ராகுல் காந்தி மீது ஐபிசி 499 மற்றும் 500 யின் கீழ் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள சூரத் நீதிமன்றம், அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு செய்ததால் ராகுல் காந்தி குற்றவாளி என்றும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி, “ஊழலுக்கு எதிராக நான் எப்போதும் குரல் எழுப்பி வருகிறேன். எனது நோக்கம் தவறாகவோ யாரையும் புண்படுத்தவோ இல்லை” என விளக்கம் அளித்துள்ளார். இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்வார் என தகவல்.