வடமாநில தொழிலாளர்களை பாதுகாக்க புது ஆன்ராய்ட் ஆப் அறிமுகம்…!
சேலத்தில் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதியசெயலியை அறிமுகப்படுத்திய சேலம் மாநகர காவல் துறை. இந்த செயலியில் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று பதிவிட்டால் , உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உதவ முடியும் என மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகர காவல்துறையின் சமுதாயக் கூடத்தில் இன்று மாலை , வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செல்போன் மூலம் புதியசெயலி அறிமுகம் செய்யப்பட்டது. புலம்பெயர்ந்த வட மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு “Migrant Care” app என்ற ஆன்ராய்ட் செயலி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில்
சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி அவர்கள் கலந்து கொண்டு , புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்ததோடு , இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என வடமாநில தொழிலாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற வட மாநில தொழிலாளர்கள் அனைவரும் , இந்த புதிய செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். குறிப்பாக இந்த செயலி மூலமாக புலம் பெயர்ந்த சேலம் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை இணைத்து , அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வடமாநில தொழிலாளர்களும் தங்களது விவரங்கள் மற்றும் அலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத் செய்யப்பட்டுள்ளது.
இதில் பாதுகாப்பாக உள்ளேன் மற்றும் பாதுகாப்பு இல்லை என இரண்டு பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வடமாநில தொழிலாளர் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்தால், பாதுகாப்பு இல்லை என்று பதிவு செய்தால், எந்த இடத்தில் இருந்து வடமாநிலத் தொழிலாளர் பதிவு செய்துள்ளனர் என்பதை அறிந்து , உடனடியாக அங்கு சென்று சோதனை மேற்கொண்டு , அங்கு பாதுகாப்பு இல்லை என்றால், அவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்த செயலியை உருவாக்கி உள்ளதாக மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்காக தனிக்குழு அமைத்து காவல்துறையினர் 24 மணி நேரமும், இந்த செயலியை கண்காணித்து பணியில் ஈடுபடுவார்கள் எனவும் மாநகர காவல் ஆணையர் கூறினார். இந்த செயலை உருவாக்கித் தந்த சேலம் சோனா பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி IPS , மற்றும் காவல் துணை ஆணையர்கள் லாவண்யா , மாடசாமி ஆகியோர், நெத்திமேடு பகுதியில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தும், அறிவுரை கூறியதும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.