சினிமாவை மிஞ்சும் ‘ரூட் தல’ விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் மோதல்…!

சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் புறநகர் ரயிலை நிறுத்தி இருதரப்பு கல்லூரி மாணவர்கள் மோதல். கத்தியுடனும், கற்களை வீசியும் மாணவர்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. ரூட் தல விவகாரத்தில் மோதலா என ரயில்வே போலீசார் விசாரணை.

சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி என முக்கிய கல்லூரிகளில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை – கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் பயணித்து வருகின்றனர். அவ்வப்போது இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வருகிறது. 

இன்று சென்னை சென்ட்ரலில் இருந்து சூளூர்பேட்டை நோக்கி சென்ற புறநகர் ரயிலில் ஒருதரப்பு மாணவர்கள் பயணித்த நிலையில் பொன்னேரி ரயில் நிலையத்தில் மற்றொரு தரப்பினர் ரயில் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். மேலும் பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து கவரைப்பேட்டை ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் பெரியகாவனம் அருகே புறநகர் ரயிலை நிறுத்தி இருதரப்பு கல்லூரி மாணவர்கள் மீண்டும் கத்தியுடனும், கற்களை வீசியும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மோதலில் காயமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ரூட் தல விவகாரத்தில் மாணவர்கள் அவ்வப்போது மோதி கொள்வதால் புறநகர் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மாணவர்கள் மோதலை தடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *