தேர்தல் விதிமீறல் இதுவரை 116 வழக்குகள்… தேர்தல் அதிகாரி சிவகுமார் தகவல்…!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான க. சிவக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும், அதேபோல தற்காலிக தேர்தல் பணிமனைகளும் நாளை மாலை 5 மணியுடன் அவர்களாகவே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தொகுதியை சாராத அரசியல் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் , பொதுமக்கள் அனைவரும் ஐந்து மணிக்கு மேல் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் , ஞாயிற்றுக்கிழமை காலை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கூறியவர் தேர்தல் விதி மீறல் தொடர்பாக 725 புகார்கள் வந்துள்ளன, அதில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பில் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பறக்கும் படையினர் மூலம் 41 வழக்குகள் போடப்பட்டுள்ளது. மொத்தம் 116 வழக்குகள் தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா மற்றும் பரிசு பொருள்கள் தொடர்பாக எந்த ஒரு புகார் வந்தாலும் உடனடியாக சென்று அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
தேர்தல் பணியில் அலட்சியமாக இருந்த 12 அலுவலர்கள் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.