காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை. அதை வேடிக்கை பார்த்த காவல் ஆய்வாளர்…!
காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை. மனிதாபிமானம் இல்லாத ஆய்வாளர் போனில் பேசிக் கொண்டிருந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே உள்ள கன்னிமா நகரைச் சேர்ந்தவர் விவசாயி பாண்டி. இவரது மகன் சதீஷ்கண்ணன் (23) என்பவரை, பள்ளபட்டியைச் சேர்ந்த நாச்சியப்பன், பொட்டிசெட்டிபட்டியை சேர்ந்த சின்னகருப்பு பள்ளபட்டி அருகே கவுண்டன்பட்டி சேர்ந்த வழக்கறிஞர் சங்கர், மற்றும் சிலர் பாண்டி என்பவருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு பேசி உன்னை பொய் புகார் கொடுத்து உள்ளே தள்ளி விடுவோம் உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என, சதீஷ் கண்ணனை கடந்த, 13.4.2022 அன்று மிரட்டியதாக கூறப்படுகிறது..
இதுகுறித்து, அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில், விவசாயி பாண்டி, தான் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்க கூறி மனு தாக்கல் செய்தார். இதில், சம்பந்தப்பட்ட நபரின் புகார் மீது, விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதிமன்றம் கடந்த, டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த சதீஸ்கண்ணனின் தந்தை, விவசாயி பாண்டி (50) என்பவர், கடந்த 7-ம் தேதி இரவு அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் முன்பு, காவல்துறையை கண்டித்து, விஷம் குடித்தார். அவரை உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிக்காக சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைகாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விவசாயி பாண்டி கடந்த 9-ஆம் தேதி அதிகாலை மரணமடைந்தார். இந்நிலையில், விவசாயி பாண்டி விஷம் குடித்த அன்று, பாண்டி கொடுத்த புகாருக்கு நாச்சியப்பன், சின்னகருப்பு, வழக்கறிஞர் சங்கர் உட்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல், காவல் நிலைய முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி பாண்டி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் சங்கர் உட்பட 3 பேரை கைது செய்ய வேண்டும். விவசாயி பாண்டி குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயி பாண்டியின் உடலை பெற, உறவினர்கள் மறுத்துவிட்டனர். பின்னர், உங்கள் கோரிக்கை நிறைவேறப்படும் என, மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, விவசாயி பாண்டியன் உடலைப் பெற்றுக்கொண்டு, கன்னிமா நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாண்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
விவசாயி பாண்டியின் தற்கொலைக்கு காரணமாக இந்த, வழக்கறிஞர் சங்கர், நாச்சியப்பன், சின்னகருப்பு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், அம்மையநாயக்கனூர் காவல்துறை ஆய்வாளர் சண்முகலட்சுமியிடம், உயர் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயி பாண்டி காவல் நிலையத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்த போது, அம்மையநாயக்கனூர் காவல்துறை ஆய்வாளர் சண்முகலட்சுமி மனிதாபிமானம் இல்லாமல், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த, பாண்டியின் அருகில் நின்று, செல்போனில் பேசிக்கொண்டிருந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உயிருக்கு போராடி, உட்கார்ந்தபோது மயங்கி கீழே விழுந்த அவரை, அங்கிருந்த ஒருவர் தூக்கு முயற்சித்த போது, அதனை தடுத்து விட்டனர். அங்கிருந்த மற்ற காவல்துறை வழக்கம் போல் தங்கள் பணியை கவனித்துக்கொண்டிருந்தனர். அதில், ஒரு காவல்துறையினர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், உயிருக்கு போராடி அவரை காப்பாற்ற அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. காவல்துறை அதிகாரியின் பொறுப்பற்ற மனிதாபிமானம் இல்லாத இந்த செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.