உடனடியாக அமலுக்கு வந்தது… ஈரோடு இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள்…

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து தலைவர்களின் பெயர், புகைப்படங்களை மறைக்கும் பணி தொடங்கியது.. 

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தும் அலுவலராக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. தலைவர்களின் பெயர் மற்றும் கல்வெட்டுகளில் உள்ள பெயர்கள் மூடி மறைக்கப்பட்டன.  இதேபோல் நகரில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இதனிடையே ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேட் இயந்திரங்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *